“அழுத்தங்களுக்கு அஞ்சுவோம் என மோடி, அமித் ஷா நினைப்பது நடக்காது” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் நினைக்கின்றனர். ஆனால், அது நடக்காது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் உள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.

மோடியும், அமித் ஷாவும் நம் ஜனநாயகத்திற்கு எதிராக எது செய்தாலும் நாஙக்ள் களத்தில் நின்று போராடுவோம். நாங்கள் எங்கும் ஓடி, ஒளிய முடியாது என்று கூறுகிறார்கள். நாங்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? ஓடுவதைப் பற்றி அவர்கள் தான் பேசுகிறார்கள். நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை.

மோடியைப் பார்த்து எங்களுக்குப் பயமில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் எனது கடமையைச் செய்வேன். ஜனநாயகத்தை காக்க செயல்படுவேன். நாட்டில் ஒற்றுமையை நிலைநிறுத்த செயல்படுவேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.