உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 140 பெண் தொழிலாளர்கள் விஷவாயு கசிவால் மயக்கம்

திருமலை: ஆந்திராவில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கவிந்து 140 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டத்தில் அச்யுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பிராண்டிக்ஸ்(உரம் தயாரிக்கும்)  தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர்.  இந்த பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் பணியாளர்கள் வாந்தி, குமட்டல் காரணமாக ஒவ்வொருவராக மயங்கி கீழே விழுந்தனர். என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் சுமார் 140 பேர் தொடர்ந்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து, 100 பெண்கள் அனகாப்பள்ளி அரசு மருத்துவமனைக்கும், 40 பேர் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தகவலறிந்த அனகாப்பள்ளி எஸ்பி கவுதமிஷாலி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, பணியாளர்கள் மயக்கம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.