சீதாராமம் பட முதல் டிக்கெட்டை வாங்கிய பிரபாஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் அவரது இரண்டாவது படமாக உருவாகியுள்ளது 'சீதாராமம்'. மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். நாளை ஆகஸ்ட் 5ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் பிரபாஸ்.

இந்த நிகழ்வில் சீதாராமம் படத்திற்கான முதல் டிக்கெட்டை 100 ரூபாய் கொடுத்து பெற்றுக்கொண்டார் பிரபாஸ். இதையடுத்து அவர் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரைலர் பிரமிக்க வைக்கிறது. நம் நாட்டில் உள்ள மிகவும் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களில் துல்கர் சல்மானும் ஒருவர். அவர் மிகப்பெரிய நடிகர்.. மகாநடி என்ன ஒரு அருமையான படம். இந்த சீதாராமம் படத்தில் கூட ஒவ்வொருவரும் துல்கர் மற்றும் மிருணாள் தாக்கூரின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் இந்த படத்தை பார்ப்பதற்கு விரும்புகிறேன்.

என்னதான் நம் வீட்டில் பூஜை அறை இருந்தாலும் நாம் கோவிலுக்கு செல்வதை நிறுத்துவது இல்லையே.. நமக்கு தியேட்டர்கள் தான் கோவில். அந்தவகையில் இந்த படத்தையும் தியேட்டரில் சென்று அனைவரும் பார்க்க வேண்டும். நான் எப்போதும் வெளியே செல்லும்போது ஒரு ரூபாய் கூட வைத்துக் கொள்வதில்லை” என்று என்று கூறிய பிரபாஸ் இந்த படத்தின் முதல் டிக்கெட்டை 100 ரூபாய் கொடுத்து வாங்கியதுதான் ஆச்சரியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.