கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கடந்த 1814-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இது உலகின் மிக பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். மத்திய கலாச்சார துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த அருங்காட்சியகத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் நேற்று இரவு 7 மணி அளவில் சி.ஐ.எஸ்.எப். படையை சேர்ந்த வீரர் ரஞ்சித் குமார் சாரங்கி, உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் வீரர்களை குறிவைத்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டார். இதில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆங்கி உயிரிழந்தார். தலைமைக் காவலர் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திடீர் தாக்குதல் நடத்திய ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மனஅழுத்தத்தின் காரணமாக உயரதிகாரிகள், சக வீரர்கள் மீது அவர் தாக்குதல் நடத்தியிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.