'சென்னைக்கு வந்து செட்டில் ஆகுங்க..!' – வெங்கையா நாயுடுவுக்கு திமுக எம்பி அழைப்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விடைபெற உள்ள வெங்கையா நாயுடு, சென்னையில் செட்டில் ஆக வேண்டும் என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து நடைபெற்ற குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றார். இவர், நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக, வரும் 11 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு, மாநிலங்களவையில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர்கள், வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.

இந்த விழாவில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது:

நான் அரசியலுக்கு புதிது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மூத்த வழக்கறிஞராக வாதாடி உள்ளேன். நான், மாநிலங்களவைக்கு முதன்முறையாக வந்த போது, உங்களை பார்த்தவுடன், நீதிபதி ஆவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருப்பதை பார்த்தேன்.

அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கியவர் நீங்கள். நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தான் உறுப்பினர்கள் கற்றுக் கொள்கின்றனர். எப்படி பேச வேண்டும் என்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் எங்களை நீங்கள் வழிநடத்தி உள்ளீர்கள்.

உங்களுடைய இரண்டாவது சொந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு மக்களின் மனங்களில் நீங்கள் நீங்கா இடம் பிடித்துள்ளீர்கள். நீங்கள் தமிழ்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என, நான் ஆசைப்படுகிறேன். என்னுடைய அனைத்து பிறந்த நாளுக்கும் நீங்கள் தொலைபேசியில் வாழ்த்து கூறியுள்ளீர்கள். உங்களைப் போன்ற தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் கற்றுக் கொடுத்ததை நாங்கள் அனைவரும் பின்பற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.