முன்கூட்டியே முடிந்தது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்துள்ளது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும், ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர்.

இதனால், பாதி நாட்கள் இரண்டு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மழைக்காலக் கூட்டத்தொடரை வரும் 12 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே முடிக்கப்படுவதாக, மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையிலும் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையில் ஏழு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இன்று, மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.