ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனாவுக்கு இந்தியா மறைமுக கண்டனம்| Dinamalar

நியூயார்க்:’உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதாரங்கள் அடிப்படையிலான பரிந்துரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது’ என, சீனா தலைமை வகித்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.
கடந்த ஜூனில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை, தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக பரிந்துரைத்தன.ஆனால், இந்த பரிந்துரையை ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பினரான சீனா கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது.
இதற்கு முன்னரும், பாக்., பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரிய போது சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், இந்த மாதம் சீனா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பேசியதாவது:
பயங்கரவாதிகள் மீதான தடுப்பு நடவடிக்கையை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி நிறுத்தி வைப்பது முடிவுக்கு வர வேண்டும். தடுப்பு கமிட்டி வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும்.உலகின் மிக மோசமான சில பயங்கரவாதிகளை தடுப்பு பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட பரிந்துரை முறையான காரணம் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இரட்டை நிலைகள், தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும்.
சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடும்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி, பாக்.,கை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உறவினர். இவர் மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது.இந்நிலையில், இவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சித்து வருகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.