மதுரை: களியாக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடியுடன் வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஆகஸ்ட் 15-ல் மதியம் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நூறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசியக்கொடியுடன் பேரணியாக செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று விசாரித்து, மனு தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.