புதுச்சேரி: முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் ஆளுநர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக முழு பட்ஜெட் மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படுவதில்லை. பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள என்ஆர் காங்கிரஸும் இம்முறை மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தது. முழு பட்ஜெட்டை இம்மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டது.
துணைநிலை ஆளுநர் தமிழசை தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 11 ஆயிரம் கோடி என இறுதி செய்யப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1724 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட 150 கோடி ரூபாய் குறைவு. அதனால் கூடுதல் தொகையுடன் அனுமதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அனுமதி கிடைக்காததால் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு தந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று ஆளுநர் தமிழிசை உரையுடன் கூடியது. ஆளுநர் உரையை வாசித்ததையடுத்து பேரவைத் தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டதாக பேரவை வட்டாரங்கள் கூறுகினறனர்.