மின் திருத்த மசோதாவால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்பு: வேல்முருகன்

சென்னை: மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதாவினால் தமிழகத்தின் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது: ”ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு, மின்சார சட்டம் 2003இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்ட திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே, பல தரப்பு மக்களும், எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இச்சூழலில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மின்சார சட்டத்திருத்த மசோதா 08.08.2022 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா, இந்தியாவை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். இந்த மசோதாவின்படி மாநில மின்வாரியங்களுக்குப் பதிலாக ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மின்விநியோகத்தை மாநில அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றாலும், மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு போன்ற பயன்மிகுந்த திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒட்டுமொத்த மின் இணைப்பில் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்திற்கும், 11 லட்சம் மின் இணைப்புகள் குடிசை வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே போல விசைத்தறி தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின்படி இலவச மின்சாரம் முற்றாக தடைசெய்யப்படும். மின்விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இருக்காது.

ஏனென்றால், மின்சாரச் சட்டத்தின் திருத்தம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் கட்டணங்களை திருத்துவதற்கு அனுமதிக்கும். மேலும், இந்த சட்டத்திருத்தம், மின்சார ஊழியர்கள் மற்றும் மின்சார நுகர்வோர் மீது நீண்டகால பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.

எனவே, மின்சாரச் சட்டத்தின் திருத்தத்தின் சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அச்சட்ட வரைவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.” இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.