கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2.12 லட்சம் கனஅடி நீர்திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று மாலைவிநாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 1.20 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து,  நேற்று மாலை 4.30 மணியளவில் விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. பாதுகாப்பு கருதி 1.60 லட்சம் கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 16 கண் மதகுகள் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 2 லட்சம் கனஅடியை தாண்டும் என்பதால் காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.