சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பைக்கில் இரு வாலிபர்கள் தாளவாடி நோக்கி நேற்று மதியம் சென்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சென்றபோது ஒற்றை காட்டு யானை நடமாடிக் கொண்டிருந்தது. யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் சென்றுள்ளனர். அருகே சென்றபோது திடீரென காட்டு யானை பைக்கை துரத்த தொடங்கியது. இதனால் அந்த வாலிபர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் காட்டு யானை தொடர்ந்து துரத்தாமல் நின்றதால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து சிறிது நேரம் அப்பகுதியில் உலவிய காட்டு யானை மீண்டும் இரு வாலிபர்களையும் துரத்த முற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதைத்தொடர்ந்து இரு வாலிபர்களும் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
