நியூயார்க்:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துவை, அவமதிக்கும் வகையில் நடந்த மற்றொரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்மான்ட் பகுதியில் வசிக்கும், இந்திய வம்சாவளியான கிருஷ்ணன் ஜெயராமன், சமீபத்தில் அங்குள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார்.அப்போது, அங்கிருந்த இந்தியரான தெஜிந்தர் சிங் என்பவர், கிருஷ்ணன் ஜெயராமனை அசைவ உணவு சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு, கிருஷ்ணன் ஜெயராமன் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தெஜிந்தர் சிங் அவரை தாறுமாறாக திட்டியுள்ளார். ஹிந்து மதம் குறித்தும் அவதுாறாக பேசிய அவர், கிருஷ்ணன் ஜெயராமன் முகத்தில் உமிழ்ந்துள்ளார். மேலும், அசைவ உணவை கிருஷ்ணன் ஜெயராமன் வாயில் திணிக்க முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தை, தன் மொபைல் போனில், ‘வீடியோ’வாக பதிவு செய்திருந்தார் கிருஷ்ணன் ஜெயராமன். அது, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, உணவு விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், தெஜிந்தர் சிங்கை கைது செய்தனர். இன வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement