“அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்” – புகழேந்தி

சேலம்: “அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கூறினார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ”நீதிபதிகளின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள இந்தத் தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முந்தைய தீர்ப்பில் எங்களுக்கு சாதகமாக வந்தது. தற்போது இந்த தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம். வழக்கறிஞர்களுடன் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி இல்லை என்று சொல்லும்போது, உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி, இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவை சுற்றியே உள்ளது. கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவைக் கண்டு கொள்ளவில்லை.

தொண்டர்கள் முழுவதும்‌ எங்கள் பக்கம் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு யாரும் செல்லலாம். சேலத்தில் விரைவில் பிரமாண்டமான பொதுக்கூட்டம், மாநாடு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.