வாகன விபத்தில் சிக்கி பலியாவதால் கர்நாடகத்தில் இரவு நேரங்களில் சி.ஐ.டி. போலீசார் பயணம் செய்ய தடை

பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார், ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க சென்ற போது விபத்தில் சிக்கினார்கள். அதாவது போலீசார் சென்ற கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ்காரா்கள் பலியாகி இருந்தார்கள். இது சக போலீஸ்காரா்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதுபோல், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும், வழக்குகள் தொடர்பான விசாரணைக்காகவும் போலீசார் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி காயம் அடைவது, உயிர் இழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரவு நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கவோ, வழக்கு விசாரணை மேற்கொள்வதற்காகவோ வாகனங்களில் பயணம் செய்வதற்கு சி.ஐ.டி.போலீசாருக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை பணி நிமித்தமாக சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் பணியாற்றும் போலீசார், வாகனங்களில் தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதித்து சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதுபோல், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் போலீசாரும் இரவுநேர பயணம் செய்ய தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.