சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லின்டா, லினெட்

லின்டா அசத்தல்

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 130-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, 298-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்கோவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லின்டா புருவிர்தோவா போராடி இழந்தார். அதன் பிறகு ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றிய அவர் சரிவில் இருந்து அபாரமாக மீண்டார். 2 மணி 54 நிமிடம் பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 17 வயதான லின்டா புருவிர்தோவா 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 25 வயது நடியா போடோரோஸ்கோவை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து வீராங்கனை பாதியில் விலகல்

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், 174-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை கேட்டி ஸ்வானுடன் மோதினார்.

இதில் முதல் செட்டில் மேக்டா லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது உடல் நலம் பாதிப்பு காரணமாக கேட்டி ஸ்வான் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் மேக்டா லினெட் இறுதிப்போட்டியை எட்டினார்.

முன்னதாக நடந்த இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணை 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பீங்க்டார்ன் லீப்பீச் (தாய்லாந்து)-மாயுகா உஜ்ஜிமா (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று இறுதிப்போட்டி

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் இரட்டையர் இறுதிப்போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) கூட்டணி, அன்னா லின்கோவா (ரஷியா)-நடிலா ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) இணையை எதிர்கொள்கிறது.

இதனை தொடர்ந்து நடைபெறும் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.