பிரீ ஃபயர் விளையாட்டு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது – நீதிபதிகள் கருத்து

பிரீ ஃபையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை. இது தொடர்பாக விசாரித்தபோது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ ஃபையர் விளையாட்டு விளையாடியதாகவும் அதில், ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். வளர் இளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
image
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு, ‘’கொரோனா ஊரடங்கு காலகட்டம் இளைய தலைமுறைக்கு சோதனை காலகட்டமாகவே அமைந்துவிட்டது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற பொழுது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்திலும், ஆன்லைன் விளையாட்டிலும் மூழ்கியுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டுகள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.
image
பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. பிரீ ஃபையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவரே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால், பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம், பெண்ணை அழைத்து சென்றதாகக் கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.