பிரதமருக்கு ரூ.360 கோடியில் வீடு; நவீன வசதிகளுடன் உருவாகிறது!

பிரதமருக்கு ரூ.360 கோடியில் புதிய பிரமாண்ட வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது. தாரா ஷிகோ சாலையில் அமைய இருக்கும் பிரதமரின் இல்லம் 2 தளங்களை கொண்டதாக அமைய இருக்கிறது.

புதிய குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, புதிய இல்லம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

மேலும், பிரதமரின் புதிய குடியிருப்பு வளாகத்தில் மொத்தம் 4 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மற்றும் 25 கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட இருக்கிறது.

பிரதமரின் இல்ல வளாகம், ராஷ்டிரபதி பவன் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அருகேயும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனக் கட்டிடத்திற்கு எதிரிலும் தாரா ஷிகோ ரோடு, புது டெல்லியில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

இந்த வளாகத்தில் பிரதமரின் வீடு, பிரதமரின் உள்துறை அலுவலகம், சிறப்பு பாதுகாப்புக் குழு அலுவலகம் ஆகிய வசதிகளுடன் சுமார் 21,000 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

மத்திய பொதுப்பணித்துறை ரூ.360 கோடி மதிப்பிலான பிரதமர் புதிய குடியிருப்பு வளாகத்தை கட்டுவதற்கு டெண்டர் வழங்க இருக்கிறது. 21 மாதங்களுக்குள் கட்டி முடிக்க தகுதியான நிறுவனங்களுக்கு மட்டும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் இல்லம் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அடுத்தபடியாக மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல நவீன வசதிகளுடன் பிரதமர் இல்லத்தை கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.