பாலக்காடு, கேரளாவில், பள்ளி மாணவர்கள் சென்ற தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியதில், ஐந்து மாணவ – மாணவியர், ஒரு ஆசிரியர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்; ௪௦ பேர் பலத்த காயமடைந்தனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ௪௨ மாணவ – மாணவியர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்
.இவர்கள் சென்ற பஸ், பாலக்காடு மாவட்டத்தில் வடக்கன்சேரி பகுதியில், கேரள மாநில அரசு பஸ்சின் பின்புறம் பலமாக மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சுற்றுலா பஸ்சில் பயணித்த மூன்று மாணவியர், இரண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர். இதேபோல், அரசு பஸ்சில் பயணித்த மூன்று பயணியர் உயிரிழந்தனர்; மொத்தம் ௪௦ பேர் காயமடைந்தனர்.”தனியார் சுற்றுலா பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
”இந்த பஸ் ௧௦௦ கி.மீ., வேகத்தில் சென்றதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என, கேரள சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜ் நேற்று தெரிவித்தார்.கேரள முதல்வர் பினராயி விஜயன், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என, வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement