திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை ஆரம்பித்துள்ளனர். அதனால், பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்ததாவது:-
“விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும் விதை கிராமத்திட்டத்தின் மூலமாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை – தரணி ரக விதைகள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது. நுண்ணுாட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை, பருத்தி வகை நுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை மற்றும் உரங்களை பெற்று பயனடையலாம்.
மேலும் தென்னை மரத்திற்கு நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வை தடுப்பதற்கு நுண்ணுாட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும். ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ போட வேண்டும். அதற்கான உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.