8 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் – நீரில் மூழ்கி இறந்த குழந்தை.. தாய் மீட்பு

வாழப்பாடி அருகே 8 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டார். ஆனால் 8 மாத கைக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (28). இந்த தமபதிக்கு திருமணமாகி கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், எட்டு மாதத்திற்கு முன்புதான் ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை தேன்மொழி தனது தோட்டத்திலுள்ள கிணற்றில் கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
image
தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் தத்தளித்த தேன்மொழியை மீட்டனர். ஆனால் 8 மாத ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி தீயணைப்புத் துறையினர் எட்டு மாத கைகுழந்தையின் சடலத்தை மீட்டனர். தேன்மொழி தற்கொலை செய்துகொள்ள கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்தாரா? தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.