தீயணைப்பு வாகனத்தில் அஜித்; திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. துணிவு படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

போனி கபூர் தயாரிக்கும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வங்கிக் கொள்ளையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

துணிவு பட ஷூட்டிங் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இதில், எடுக்க தவறிய சில காட்சிகள் மட்டும் இன்று, அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே படக்குழு படமாக்கியது.

அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இடம் பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு பதிலாக குறிப்பிட்ட காட்சிகளில் அவர்களை போல உருவம் கொண்டவர்களை வைத்து (டூப்) எடுத்துள்ளனர்.

இதற்காக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முகமுடி அணிந்து, தீயணைப்பு வாகனத்தின் மீது இருப்பதை போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே சென்னை அண்ணாசாலையில் துணிவு பட ஷூட்டிங் நடப்பதாகவும், அதில் அஜித் கலந்து கொண்டு இருப்பதாகவும் கருதிய ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். துணிவு படம் ஷூட்டிங்கால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டதாக வாகன ஓட்டிகள் கூறினர். அதே சமயம் நடிகர் அஜித் தாய்லாந்தில் தன்னுடைய உலக பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.