லண்டன், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் சமீபத்தில் அறிவித்திருந்த அனைத்து வரிச் சலுகைகள் உள்ளிட்டவற்றை, பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் போட்டியிட்டனர்.
பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்த லிஸ் டிரஸ், கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பதவியேற்றார்.அதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் கரன்சியான பவுண்ட் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.சரியான பொருளாதார ஆலோசனைகளை வழங்கவில்லை என்று நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை, சமீபத்தில் லிஸ் டிரஸ் நீக்கினார்.
புதிய நிதி அமைச்சராக, வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார்.நிதியமைச்சராக பதவியேற்ற ஹண்ட், பிரதமர் லிஸ் டிரஸ், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டோரை கடந்த சில நாட்களாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அவர் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளும் திரும்பப் பெறுவதாக அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
நாட்டின் புதிய பட்ஜெட்டை, வரும், 30ம் தேதி தாக்கல் செய்யும்போது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு எதிராக அவருடைய கட்சியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அவருடைய மோசமான கொள்கைகளே, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளதாக அவருடைய கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, ரிஷி சுனாக்கை பிரதமராக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்