இன்று நடக்கும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் இந்திக் கொள்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுத்துரைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நம் தாய் மொழியை வளர்ப்பதற்கும் பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து காப்பதற்குமே திராவிட இயக்கம் தோன்றியது. நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.
சில ஆதிக்க சக்திகளும் இதனை விடுவதாக இல்லை. இது மொழிக்கான போராட்டம் மட்டும் அல்ல. தமிழினத்தையும், தமிழர் பண்பாட்டை காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். இனிமேல் தொடரத்தான் செய்வோம். இந்திய நாட்டை ஆளும் பாஜக இந்தி மொழித் திணிப்பை தனது வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து கல்வி வட்டாரம் வரை இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியை திணிக்கத்தான் என்று நினைக்கிறார்கள்.
ஒரே நாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய மொழியை அழிக்கப் பார்க்கிறார்கள். மாநில மொழிகள் என்று ஒப்புக்காக சொல்லுகிறார்களே தவிர முழுக்க முழுக்க இந்திக்காகவே தான் அவர்கள் இதயம் துடிக்கிறது.
தாய் மொழியான தமிழை காத்திட, ஆங்கில மொழியை அலுவல் மொழியாக தொடர்ந்திட, அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்டிட தமிழகம் மீண்டும் முன்னோடி மாநிலமாக நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.