பனை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் அனைத்தும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருடன் இணைந்து தீர்க்கப்படும்

கற்பக தருவான பனை சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் துறைசார்ந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து தீர்த்து வைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்திற்கான கட்டிடத் தொகுதியின் திறப்பு நிகழ்வில் நேற்றைய தினம் (13) உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு பின்னர் பனை அபிவிருத்தி சபைக்கு வாடகை இல்லாத ஒரு சொந்தமான நிரந்தர கட்டடம் இன்று கிடைத்துள்ளது. அதற்காக துறைசார் அமைச்ருக்கு எமது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த பனை சார் அபிவிருத்தியில் பொதுமக்களாகிய உங்களது பங்களிப்புகளும் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும்.

இந்த சபையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சரான ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன். விரைவில் அது தொடர்பில் சிறந்த ஒரு தீர்வை எட்டமுடியும் என்றும் நான் நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக 2010 ஆம் ஆண்டு பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பனை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையகத்திற்கான கட்டிடத் தொகுதியே திறக்கப்பட்பது.

திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.