அமெரிக்கா | நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளை பயமுறுத்திய பாம்பு

புளோரிடா: அமெரிக்க நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளை பாம்பு ஒன்று பயமுறுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் புளோரிடாவில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் நடந்துள்ளது. யுனைட்டெட் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் இது நடந்துள்ளது. பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விமானக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விமானம் நியூ ஜெர்சி நகருக்கு சென்றதும் பயணிகள் பத்திரமாக அதிலிருந்து வெளியேறி உள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத் துறை ஊழியர்கள் இணைந்து அந்த பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டுள்ளனர். அந்த பாம்பு விஷமற்ற வகையை சார்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பினால் விமானத்தில் பயணித்த யாருக்கும் காயமோ, தீங்கோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான இயக்கத்திலும் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது. அந்த விமானம் நியூ ஜெர்சியில் தரையிறங்கியதும் தயாராக இருந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்துள்ளனர்.

விமானத்தில் பாம்பு பயணிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் நகரில் இருந்து தவாவ் சென்ற விமானத்தில் பாம்பு ஒன்று கேபினில் இருப்பதை பயணிகள் பார்த்திருந்தனர். அதனால், அவசரம் கருதி அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இதேபோல 2016-ல் மெக்சிக்கோவிலும், 2013-ல் ஆஸ்திரேலியாவிலும் விமானத்தில் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.