ஒரு மாதத்திற்கும் மேலாக திசை மாறி சென்ற இலங்கை கடற்படையின் ஆறு மாலுமிகள் இன்று (19) அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் இன்று காலை பாதுகாப்பாக நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தளபதி இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் (செப்டம்பர் 17) கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட கடற்படையினரின் கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் காரணமாக தெற்கு கடற்கரையிலிருந்து, தென்கிழக்கே 400 கடல் மைல் தொலைவில் சென்று தொடர்பாடலில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
காணாமல் போன கப்பலை கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாலைத்தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் உதவியை இலங்கை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நேற்று (18) காலை கடற்படையினர், தமது தொடர்பாடல் முறையை சரி செய்து கடற்படைத் தலைமையகத்தை தொடர்பு கொண்டதன் மூலம் அவர்களை கரைக்கு அழைத்து வருவதற்காக A521 என்ற துணைக் கப்பல் அனுப்பப்பட்டு பாதுகாப்பான முறையில் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.