உலகம் முழுவதும் அடுத்த வாரம் 24-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால், அரசு பேருந்துகள், ரெயில்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து 21-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்துகளிலும் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
அதன்படி, 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கும், ஊர் திரும்பவும் 25-ந் தேதி விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து ஊருக்கு திரும்ப மிகவும் வசதியாக இருந்தது. அதேபோன்று இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும்அரசு ஆலோசனை செய்து வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்குவது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.