அதிமுகவினர் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை: ஓபிஎஸ் 

சென்னை: அதிமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் தனக்கு எதிரானதாக கருதவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவரிடம் நேற்று (அக்.19) அதிமுகவினர் நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ” அதை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை” என்றார்.

முதல்வரிடம் ஒருமணி நேரம் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” ஏற்கெனவே என்னுடன் இருப்பவர்கள் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளனர். என்ன சவால் என்றால், பழனிசாமி நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை என்றால், அவர் விலகத் தயாரா? என்று கேட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரின் நியமனத்தை அங்கீகரிக்க மறுத்த தமிழக சட்டப்பேரவைத் தலைவரைக் கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருந்தனர். போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை அவர்களை கைது செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், ” தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்ஸை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் அப்பட்டமாகவே தெரிகிறது” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.