காரைக்குடி: புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (19). இவர் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். கடந்த செப்.30-ல் காரைக்குடி கல்லூரிச் சாலையில் ரேஸ் பைக்கில் சாகசம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இந்த வீடியோ வைரலானது. மகேஷ்வரன் மீது அழகப்பாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதையடுத்து அம்மாணவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சாகசம் செய்த இடத்தில் 7 நாட்களுக்கு மாலை 4 முதல் 6 மணி வரை போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட உத்தரவிட்டது. இதையடுத்து மகேஷ்வரன் நேற்று போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இது குறித்து மகேஷ்வரன் கூறுகையில், ‘இனி ஒருபோதும் பைக் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’’ என்றார்.