விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற போது மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (50). இவரும் சாதனந்தபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரும் இன்று காலை குளிப்பதற்காக மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்கு சென்றனர்.
அப்பொழுது அங்கு வனவிலங்குகள் வராமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததில், முனியசாமி சிக்கிக்கொண்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற சீனிவாசன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தோட்ட உரிமையாளர் மோகன்ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.