சிங்ரவுலி : மத்திய பிரதேசத்தில் இறந்து பிறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல, மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாததால், பெற்றோர் தங்கள் இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் வைத்து குழந்தையின் உடலை எடுத்து சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.
‘அல்ட்ரா சவுண்ட்’
சிங்ரவுலி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் பாரதி, தன் மனைவி மீனாவை பிரசவத்திற்காக மாவட்ட மருத்துவமனைக்கு, கடந்த 17ல் அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெறுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தனியார் கிளினிக் சென்ற தம்பதியிடம் 5,000 ரூபாய் பணம் செலுத்தும்படி ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
தன்னிடம் 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக தினேஷ் பாரதி கூறியுள்ளார். 5,000 ரூபாய் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை அளிப்போம் என, தனியார் கிளினிக் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
பணத்துடன் அடுத்த நாள் சென்றதும், மீனா பாரதிக்கு, ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு தனியார் கிளினிக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அதிர்ச்சி
மாவட்ட மருத்துவமனைக்கு வந்த மீனா பாரதிக்கு சிகிச்சை தரப்பட்டு இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதையடுத்து, தன் இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் இறந்த குழந்தையை துணியில் சுற்றி, அந்த தம்பதி எடுத்து சென்றனர். நேராக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் அளித்துள்ளனர்.
குழந்தை எங்கே என அதிகாரிகள் கேட்டதும், பைக் பெட்டியில் இருந்து குழந்தையை எடுத்து காட்டியபோது அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
‘இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கலெக்டர் ராஜிவ் ரஞ்சன் மீனா உறுதி அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்