நடிகை நிதி அகர்வால் சிம்பு நடிப்பில் வெளியான `ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான `பூமி’ படத்திலும் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “சினிமா துறையில் நீடிக்க திறமை மட்டுமல்ல அழகும் வேண்டும். திறமையைக் கண்டு வாய்ப்பு கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இனி வரும் படங்களில் கிளாமராகக் காட்சியளிப்பதுதான் ஹீரோயின்களின் வேலையாக இருக்கும்.

பார்வையாளர்களும் கிளாமருக்காகத்தான் திரையரங்குகளில் குவிகிறார்கள். அதனால்தான் கிளாமர் ஷோ பண்ண நான் தயங்குவதில்லை. எந்த ஒரு இயக்குநரும் பெரிய ஹீரோ படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நான் சம்பளம் கேட்க மாட்டேன். அவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ, அதை நான் வாங்கிக்கொள்வேன். இல்லையென்றால், `இதுதான் எனது குறைந்தபட்ச சம்பளத் தொகை!’ என்று கூறிவிடுவேன். ஏனென்றால் பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் பிற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்” என்று நிதி அகர்வால் பேசியிருக்கிறார். இவர் கூறிய இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.