சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழக சட்டபேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் விமான நிலையம் அமைகிறது. புதிய விமான நிலையத்துக்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதில் 2,605 ஏக்கர் நஞ்சை நிலமாகும். இப்பகுதிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இங்கு விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இப்பகுதி மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமானம் நிலையம் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன், சிபிஐ ராமச்சந்திரன், சிபிஎம் நாகை மாலி, பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை ஆகியோர் கவனத்தை ஈர்த்து பேசினர். இதனைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.