மீண்டும் ரிஷி சுனக்… கருத்துக்கணிப்பில் குவியும் ஆதரவு – பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ்.

பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. விலைவாசியும் நாளும் அதிகரித்தது. தனது தவறான பொருளாதார கொள்கைகளுக்கு லிஸ் ட்ரஸ் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில், ராஜினாமா முடிவையும் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பின்போது புதிய பிரதமருக்கான தேர்தல் அடுத்த வாரத்துக்குள் நடைபெறும் என்றும் அறிவித்தார் லிஸ் ட்ரஸ்.

அதனடிப்படையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் அடிபடுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோர்தான் அந்த நால்வர்.

போட்டி கடுமையாக இருந்தாலும், அந்த நால்வரில் ரிஷி சுனக்கே முன்னிலை வகிக்கிறார். யூ-கோவ் என்ற மீடியா நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் வர வேண்டும் என்று 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Sky Bet அறிக்கையிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரத்தை முன்வைத்து அடுத்தடுத்த நான்கு மாதங்களில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென இங்கிலாந்தில் ஆதரவு குரல் எழுந்துள்ளது.

முன்னதாக, லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும்போதே ரிஷி சுனக் அப்பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார். அவரது தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தைவிட ரிஷியின் மனைவி அக்சிதாவிடம் அதிக சொத்துகள் உள்ளன. இந்தியாவின் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகளான அவர், பிரிட்டிஷ் குடியுரிமை பெறவில்லை. அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த, ரிஷி சுனக் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இரட்டை குடியுரிமை வைத்திருப்பது பிரிட்டனில் இயல்பானது. எனினும் நாட்டைவழிநடத்த வேண்டிய பிரதமர் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி கன்சர்வேட்டிவ் கட்சியில் பெரும்பாலானோர் வெள்ளையின வாதத்தை ஆதரிப்பவர்கள். இந்த காரணங்களால் ரிஷி சுனக்தோல்வியை தழுவினார். இந்நிலையில் தான் மீண்டும் அவர் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. இம்முறை வெற்றி பெற்றால், இங்கிலாந்து பிரதமர் பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெறுவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.