வெங்ககல்பட்டி அருகே காலாவதி மருந்து பாட்டில்கள் கொட்டியது யார்?.. கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் திருச்சி பைபாஸ் சாலை வெங்ககல்பட்டி அருகே காலாவதியான மருந்து பாட்டில்களை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்படுத்திய, பயனற்ற, காலாவதியான மருந்து மாத்திரைகள் அனைத்தும் முறைப்படி அதனை அகற்றவும், அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுவான விதியாக உள்ளது. அதன்படித்தான் மருத்துவத்துறை இதனை பின்பற்றி வருகிறது. ஆனால், ஒரு சிலரின் செயல்பாடுகள் காரணமாக மறைமுகமாக அகற்ற வேண்டிய மருந்து, மாத்திரைகள் சாலையோரம் வீசிச் செல்லப்படும் நிகழ்வுகளும் கரூர் மாநகர பகுதிகளில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில், கரூர் திருச்சி பைபாஸ் சாலை வெங்ககல்பட்டியை ஒட்டியுள்ள சாலையோரம் 100க்கும் மேற்பட்ட மருந்து பாட்டிகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இந்த மருந்து பாட்டிகள், அனைத்தும் காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற பிரச்னைகளுக்கு ஊசியாக செலுத்தப்படும் வகையை சேர்ந்த மருந்து பாட்டிகள் எனக் கூறப்படுகிறது. முறைப்படி அழிக்கப்பட வேண்டிய மருந்து பாட்டிகள் அனைவரும் பார்க்கும் வகையில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. இதனை, சாலையோரம் நடந்து செல்லும் சிறுவர்கள் இதனை தெரியாமல் எடுத்து பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுகிறது.

எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் இதனை பயன்படுத்தும் அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், இந்த காலாவதியான மருந்து பாட்டில்களை, யார் பயன்படுத்தினர், எதற்காக இந்த பகுதியில் கொட்டிச் சென்றனர் என்பன போன்ற தகவல்கள் தெரியாத நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான நடவடிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.