தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வருட புத்தாண்டு தினத்தில்தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார், இவருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தான். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக்கற்றுக்கொண்டேன்.
நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நினைக்கவே இல்லை.
இப்போது நீ புரண்டு படுக்கிறாய், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது.
இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன். நீ பிறந்து ஆறு மாதங்கள் ஆனதற்கு வாழ்த்துகள் என்னுடைய நீல்” என பதிவிட்டுள்ளார்.