கஞ்சா, போதை மாத்திரைகளை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க புதிய கருவி?

மது அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை பிடிப்பதுபோல், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 28 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. இந்நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பழைய அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதுபோல் குறிப்பிட்ட விதிமீறல்களில் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாவது முறையாக புதிய அபராதத் தொகை அட்டவணையின்படி கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் எனவும், உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனி அதிக விழிப்புடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்கெனவே அழைப்பு மையங்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 23 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 12.5% (60 உயிரிழப்புகள்) குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே அபராதத் தொகை விதிக்கப்பட்டவர்கள் பழைய அபராதத் தொகைக்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது எனவும், புதிதாக விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கே தற்போது விதிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகை பொருந்தும் எனவும் அவர் கூறினார்.
image
அதேபோல போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மேல் உள்ள சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கும், 170 இ-செலான் இயந்திரம் மற்றும் 72 பிரெத் அனலைசர் கருவிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பான வழக்குகளை பதிவு செய்து அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் செய்த சாலை விதிமீறலை தவிர்த்து வேண்டுமென்றே வேறு ஏதேனும் அபராதம் போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டால், பொதுமக்கள் புகார் அளித்து தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வசூலிக்கப்பட்ட அபராதப் பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும், டாஸ்மாக் கடைகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று அபராதம் விதிப்பதும், வசூலிப்பதும் தவறு இல்லை எனவும் அவர் கூறினார்.
image
மேலும், அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என்ற அவர், மது அருந்துபவர்கள் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணிக்க வேண்டுமே தவிர வாகனங்களை ஓட்டிச் செல்ல கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை பிரெத் அனலைசர் கொண்டு பிடிப்பதுபோல் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கும் ஒரு தீர்வு காணப்படும் எனவும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.