காட்டுமன்னார்கோவில் அருகே தரைப்பாலம் துண்டிப்பால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள எடையார், திருமூஸ்தானம் கிராமத்தை இணைக்கும் மண் வாய்க்கால் தரைப்பாலம் உள்ளது. இந்த  பாலம் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும்  சென்று வரவும் பயன் படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மணவெளி பாலம் கடந்த 3 வருடங்களுக்கு முன் பழுதடைந்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் தேசிய ஊரக கிராம்புற சாலை திட்டத்தின் கீழ் புதிய பாலம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். இந்நிலையில் வாய்க்கால் மேல்  கடந்த 3 வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும்  மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளதால் அருகில் உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாலத்தின் கிழே  பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மணவெளி  தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தற்போது பொதுப்பணித்துறையினர் பனை மரத்தினை கொண்டு வழி அமைத்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இதனால்  10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் இருந்து  தெற்கிருப்பு, அழிச்சமங்கலம் வழி தடங்கள் மூலம் எடையார் வழியாக 10 கிராமங்களுக்கும்  போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.