புதுடில்லி, அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, மேம்படுத்தப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணையின் மூன்றாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அக்னி ஏவுகணையில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 1,000 – 2,000 கி.மீ., துாரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி பிரைம் ஏவுகணையின் முதல் சோதனை, கடந்தாண்டு ஜூனில் நடந்தது. இரண்டாவது சோதனை டிசம்பரில் நடந்தது.
இந்நிலையில், இந்த ஏவுகணையில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய தலைமுறை ஏவுகணையாக மேம்படுத்தும் பணி நடந்து வந்தது.
இந்த ஏவுகணையின் மூன்றாவது சோதனை, ஒடிசா மாநில கடலோர பகுதியில் நேற்று காலை நடந்தது.
இதில், திட்டமிட்ட இலக்கை, ஏவுகணை துல்லியமாக தாக்கியதை அடுத்து, சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement