ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் மீது அண்ணாமலை அதிருப்தி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கைகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமாலை, அதற்கான காரணங்களையும் விவரித்தார்.

இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையம், ‘குற்றவாளி யார்?’ என்பதைத் தெளிவாக கூறவில்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் ‘என் கிணற்றை காணவில்லை’ என்பது போல் அறிக்கை உள்ளது. இன்றும் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. உயர் அதகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. தவறு செய்தவர்கள் மேல் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டு, மூன்று விஷயங்களை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். முன்னாள் சுகாதாரத் துறை ராதாகிருஷ்ணன் பேசும்போது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்று பேசினார். இதையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசியல் பார்வையில் அதிகாரிகளையும் பார்க்க ஆரம்பிப்பது சரி இல்லை.

புதிய ஆதாரங்களை எதையும் இந்த ஆணையம் சொல்லவில்லை. வெறும் காரணங்களை மட்டும் சொல்லி இருக்கிறார்கள். அதிகாரி சொன்னதையும் திரித்து சொல்லி இருக்கிறார்கள். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் எந்தவித புதிய தகவலும் இல்லை. ஆணையத்தின் அறிக்கையை உண்மையை கண்டறியும் தன்மை இல்லை.

எங்களைப் பொறுத்தவரை யாராவது கையில் கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதிதான். பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் என்றால் சமூக விரோதிதான். திருமாவளவன் , சீமான், கனிமொழி, ஸ்டாலின் எல்லாம் கருத்து சொல்லவில்லையா?

ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. ரஜினிகாந்த் பேசிய கருத்து அவரது பார்வையில் சரியானது தான். அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரின் கருத்தை பற்றி ஆணைய அறிக்கையில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசியதை விட ரஜினி பேசியது ஒன்றும் தவறில்லை.

துப்பாக்கிச் சூடு பற்றி தொலைக்காட்சி மூலம் பார்த்தார் என்று சொன்னதில் என்ன தவறு உள்ளது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விஷயம் அவை. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொன்னது சரி இல்லை. எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமி எந்தச் சூழ்நிலையில் டிவி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறியிருப்பார் என்று யோசிக்க வேண்டும்” என்றார் அண்ணாமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.