இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு: மக்களே உஷார்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 69 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய அரசு, காம்பியா நாட்டு குழந்தைகள் இறப்புடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்கு ஆளான மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் சிறுநீரக பாதிப்பினால் அந்நாட்டில் உள்ள 22 மாகாணங்களில் சுமார் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 133 பேர் குழந்தைகள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, 99 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவர்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக்கின் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்தோனேசிய அரசு விசாரணை மேற்கொண்டு வருவதற்கிடையே, அனைத்து வகையான சிரஃப் மற்றும் நீர்ம மருந்துகளின் விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே, சிறுநீரக பாதிப்படைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட சில சிரப்களில் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகியவை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக்கின் தெரிவித்துள்ளார்.

BREAKING: எம்பி பதவியில் இருந்து இம்ரான் கான் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

காம்பியா நாட்டில் குழந்தைகள் மரணத்துடன் தொடர்புடைய சிரஃப்புகளின் மாதிரிகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில், எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு இருந்தது கண்டறியப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

காம்பியா நாட்டு குழந்தைகள் மரணத்துக்கு காரணமாக கூறப்படும் மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் இருந்து அகற்றுமாறும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது. எனவே, அந்த மருந்துகள் இந்தோனேசியாவிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இருப்பினும், அந்த மருந்துகள் உள்நாட்டில் பயன்பாட்டில் இல்லை என இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.