ராமேஸ்வரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 3 பேர் மீட்கப்பட்டனர். இலங்கையில் இருந்து இதுவரை 190க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், நல்லூரை சேர்ந்த சாந்தி (42). இவரது மகன் அஜந்தன்(17), மகள் சுரபி(11) ஆகியோர், இலங்கை தலைமன்னாரில் இருந்து இரவு 11 மணியளவில் படகில் தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்களை மூன்றாம் மணல்திட்டில் நேற்று காலை படகோட்டிகள் இறக்கி விட்டு திரும்பினர். தகவலறிந்து ராமேஸ்வரம் மரைன் போலீசார், அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று கடலோர காவல் படையினரின் உதவியுடன் மூவரையும் மீட்டு தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர். போலீசாரின் விசாரணைக்குப்பின் மூவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
