தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை: கொலை முயற்சி வழக்கு பதிவு!

மன்னார் வளைகுடா பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச்சேர்ந்த மீனவர்கள் சுமார் 10 பேர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விசைப்படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், எல்லை தாண்டி சென்ற மீனவர்கள் படகை நிறுத்த கோரி எச்சரிக்கை விடுத்துள்ளனர். எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியாக கூறப்படுகிறது.

இதில் படகில் இருந்த மயிலாடுதுறை வானகிரி பகுதியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் வீரவேல்(32) மீது வயிறு மற்றும் தொடை பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளது. இதனை அடுத்து அவரை இந்திய கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அத்துடன் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.