தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள்தான். தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் புதிய அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரியில் சிறுநீரகவியல் துறை பேராசிரியர்களை அவர் கெளரவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை மையத்தில் gold, diamond, platinum என்று முன்று வகையான பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில், இன்று அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட ஒன்பது வகையான முழு உடல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 6 மாதங்களில் மூலை சாவடைந்த 16 பேரிடம் உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் 84 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீக்காயம் குறைந்த அளவிலே இருக்கும் என நம்புகிறோம்.” என்றார்.
அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்தாண்டை போல் இந்தாண்டும் 565 மாணவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் முதலமைச்சர் கையால் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.