துண்டுதுண்டாக வெட்டி கொலை டிஎன்ஏ சோதனையில் குமரி ரவுடி என உறுதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர் குமரியை சேர்ந்த பிரபல ரவுடி பீட்டர் கனிஷ்கர் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் முட்டத்தறை பகுதியிலுள்ள ஒரு குப்பைக் கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஒரு ஆணின் 2 கால்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சங்குமுகம் போலீசார் அந்த கால்களை கைப்பற்றி விசாரணை  நடத்தினர்.  விசாரணையில், திருவனந்தபுரம் வலியதுறை பகுதியை சேர்ந்த மனு ரமேஷ் மற்றும் ஷெஹின் ஷா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், மனு ரமேஷின் தாய் குமரி மாவட்டத்தை  சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கும், குமரி மாவட்டம் சின்ன முட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பீட்டர் கனிஷ்கருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வேறு ஒருவர் மூலம் அந்த  ரவுடியை இந்தக் கும்பல் திருவனந்தபுரத்திற்கு வரவழைத்து வெட்டிக் கொலை செய்தது. பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளனர். இவ்வாறு வீசப்பட்ட கால்கள் தான் முட்டத்தறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கால்களை டிஎன்ஏ பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜிவ் காந்தி பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அந்த ரவுடியின் தாயின் ரத்த மாதிரியும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனையில், கொல்லப்பட்டது குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான பீட்டர் கனிஷ்கர் தான் என உறுதியானது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உடலின் மற்ற பாகங்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள பெருநெல்லி மற்றும் வலியுதுறை பாலத்தின் அருகே இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டி அந்த இடங்களில் இவர்கள் வீசியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.