ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரித்து வந்தது.
அந்த ஆணையம் சமீபத்தில் தனது விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதில், காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டு அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்பட தவறு செய்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர், தாசில்தார்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.