வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலையில், இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இந்த முகமில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் இந்த முகாமானது, கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்த அரசு எடுத்த முயற்சியின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையால் திணறி வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக உள்ள பெரிய பிரச்னையின் பக்க விளைவுகளை 100 நாளில் தீர்த்து விட முடியாது.
இருந்த போதிலும் இந்தியா, முழு பலத்துடன் புதிய முயற்சிகள் மற்றும் சில அபாயங்களுடன் உலகளாவிய நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முயற்சிக்கிறது. உங்களின் ஒத்துழைப்பால் இதுவரை நாட்டை காப்பாற்றத கொள்ள முடிந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய பிரச்னைகளை குறைத்துள்ளோம்.

சுயசார்பு இந்தியா என்ற பாதையை நோக்கி நடை போடுகிறோம். உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் இந்தியா அதனை சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது.கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பணியாணை பெற்றவர்கள் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். வேளாண்மை, சிறு குறு நடுத்தர தொழில் துறை வலிமை அதிகரிப்பதை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
சென்னையில் நிர்மலா சீதாராமன்
சென்னை அயனாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement