சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை (அக்.22ம்) காலை 8. 30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி காலை புயலாக வலுபெறக் கூடும். அதன் பின்னர் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
இதன் காரணமாக இன்று (22-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
23ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.