சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: ரவீந்திரநாத் எம்.பி.க்கு வன துறை சம்மன்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப் பகுதியில் செப்.27-ல் மின் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. இதை மீட்க முயன்றபோது உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியதாக வனத் துறையினர் தெரிவித்தனர். ஆனால், அடுத்தநாளே அருகில் இருந்த இன்னொரு தோட்டத்து மின் வேலியில் சிக்கி அந்த சிறுத்தை இறந்து கிடந்தது. இந்தத் தோட்டம் காளீஸ்வரன், தியாகராஜன் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் உள்ளிட்ட 3 பேருக்குச் சொந்தமானது. இறந்து கிடந்த சிறுத்தையை வனத் துறையினர் அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து புதைத்தனர். மேலும் சிறுத்தை இறந்த சம்பவத்தை மறுநாளே தெரிவித்தனர்.

சிறுத்தையின் இறப்பு குறித்து வன உயிரின ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அத்தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியனை வனத் துறையினர் கைது செய்தனர். தோட்ட உரிமையாளர்களை கைது செய்யாமல் ஆட்டிக் கிடை அமைத்தவரை கைதுசெய்வதா எனக் கூறி கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் கைதைக் கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதைத் தொடர்ந்து தோட்ட மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர். ஆனால், தோட்ட உரிமையாளர் ப.ரவீந்திரநாத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் வனத் துறையிடம் மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வனத் துறை, மக்களவைத் தலைவர் மூலம் ப.ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

2 வாரத்துக்குள்.. இது குறித்து மாவட்ட வன அலுவலர் சமர்தா கூறியதாவது: சிறுத்தை இறந்தது தொடர்பாக ஏற்கெனவே காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ப.ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினர் என்பதால் அதற்கான நடைமுறையைப் பின்பற்றி மக்களவைத் தலைவர் மூலம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அக்.28- முதல் 2 வாரத்துக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.